இந்தியா
ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டிப்பு!
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த சர்வதேச விமான சேவையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது என்பதும் ஒரு சில சிறப்பு விமானங்கள் மட்டுமே சில நாடுகளுக்கு இயக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் பல நாடுகளில் பரவி வருகிறது என்றும் 38 நாடுகளில் பரவி விட்டதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க இருந்த சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீடிப்பதாகவும் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து விமான நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.