இந்தியா
சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்தி: சிறையிலிருந்து இந்திராணி கருத்து!
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி மும்பையிலுள்ள பைகுல்லா சிறையில் தற்போது உள்ள இந்திராணி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளார். இவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதி கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தின் இந்த அதிரடி கைது நாடு முழுவதும் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திராணி. ஷீனா போரா வழக்கில் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட இந்திராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்திதான். இப்போது அனைத்து தரப்பிலும் சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.