இந்தியா
இந்தியாவின் முதல் புல்லட் இரயில்: 21 கிமீ தொலைவு தண்ணீருக்குள் பயணம்!
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்லட் இரயில் (Bullet Train)
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புல்லட் இரயில் திட்டம் நடைபெற்று வருகிறது. ரூபாய் 1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதுவரையில் 26% பணிகள் நிறைவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 4 வருடங்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, இந்தத் திட்டம் நடப்பாண்டு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்டது. இருப்பினும், நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இத்திட்டம் இன்னும் முடியாமல் இருக்கிறது.
தண்ணீரில் பயணம்
மும்பையில் இருந்து புறப்படும் புல்லட் ரயில், மகாராஷ்டிராவில் ஒரு இரயில் நிறுத்தத்தில் நிற்கும். அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் சபர்மதி ஆகிய இரு இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரயில் மகாராஷ்டிராவில் உள்ள தானே பகுதியை ஒட்டி, கிட்டத்தட்ட 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தண்ணீருக்குள் பயணிக்கும் புதிய அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.