இந்தியா
உலகிலேயே அதிக நேரம் வேலை பார்க்கும் இந்தியர்கள்.. ஆனால் சம்பளம் என்னவோ கம்மி தான்
இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால் முறைசாரா துறையில் பணிபுரியும் இந்தியாவின் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கும் மற்றும் பல திறமையான தொழிலாளர்களுக்கும் இந்த புதிய திட்டம் பெரிய அளவில் உதவாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகளவில் அதிகம் வேலை செய்யும் தொழிலாளர்களில் இந்தியர்கள் உள்ளனர்.
உலகளவில் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் மட்டுமே ஒரு சராசரி தொழிலாளி ஒரு இந்திய தொழிலாளியை விட நீண்ட காலம் வேலை பார்க்கும் நாடுகள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளிலும் மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இந்தியர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது இடத்தில் இந்தியா
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வாரத்திற்கு 48 மணிநேர வேலையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தேசிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட வீட்டு கணக்கெடுப்புகளிலிருந்து இந்த மதிப்பீடுகள் பெறப்படுகின்றன. இந்தியாவில் நீண்ட வேலை நேரம் இருந்த போதிலும் ஊதியம் என்பது குறைவாகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி பங்காளதேஷ்க்கு அடுத்தபடியாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகக் குறைந்த சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது.
அதேபோல 2020 – 2021 ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின் படி, சில துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர, இந்தியாவின் குறைந்தபட்ச ஊதியம் என்பது உலகிலேயே மிகக் குறைவானவை. நாடு முழுவதும் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய நிலைகளில் இருந்து உண்மையாக வழங்க கூடிய ஊதிய நிலைகள் வேறுபடலாம். ஆனால் இவை இரண்டும் நெருக்கமாக இணைக்கப்படுகின்றன.
Also Read: கொரோனாவுக்கு எதிரான போராட்டம்.. இந்தியாவின் செயல் அற்புதமானது.. பாராட்டிய ஐநாவின் தலைவர்
இந்தியாவை பொறுத்தளவில் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் நல்ல ஊதியம் பெரும் தொழிலாளர்கள் கிராமப்புற தொழிலாளர்களை விட அதிக நேரம் பணியாற்ற முன்வருகின்றனர் என 2018-2019 ஆம் ஆண்டிற்கான ஒரு சர்வே காட்டுகிறது. கிராம மற்றும் நகர்ப்புறங்களில் பெண்களை விட ஆண்களே அதிக நேரம் வேலை பார்க்கின்றனர். அதேநேரம் நகர்ப்புறங்களில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வேலை நேரம் கிராம பகுதிகளை விட அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் வேலை செய்யும் மணிநேரங்களுக்கான வரையறையில், உண்மையில் வேலை செய்யும் நேரம், வேலை செய்யும் இடங்களுக்கிடையேயான பயணம், சிறுநீர் இடைவேளை, தேநீர் இடைவேளைக்கு செலவழிக்கும் நேரம் ஆகியவையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். அதேசமயம் வேலைக்கு செல்லும் நேரம் மற்றும் நீண்ட உணவு இடைவேளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது.
அந்த நான்கு நாட்கள் வேலையை தவிர்த்து, பெரும்பாலான இந்தியர்கள் கிட்டத்தட்ட எல்லா நாட்களும் வேலை பார்க்கின்றனர். சுயமாக தொழில் செய்வோர் கிட்டத்தட்ட வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை பார்க்கின்றனர். சம்பளம் பெறும் ஊழியர்கள் கூட வாரத்தில் சராசரியாக ஆறு நாட்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள்.
சில முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து அல்லது நான்கு நாட்கள் வேலை வழங்க விரும்பலாம் என்று தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார். ஆனால் வாரத்தில் நான்கு நாள் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும், மேலும் அந்த நான்கு வேலை நாட்களிலும் 12 மணி நேர ஷிப்டுகளை அனுமதிக்க வேண்டும்.
உத்தியோகபூர்வ நேர-பயன்பாட்டு கணக்கெடுப்பின் தரவுகளில், இந்தியர்கள் தங்களுக்கான நாட்களில் பத்தில் ஒரு பங்கை விடுமுறை நாட்களில் ஓய்வு நேர நடவடிக்கைகளுக்காக செலவிடுகிறார்கள், அதிலும் பெண்கள் ஆண்களை விட குறைவான நேரத்தை ஓய்வு நேரத்திற்காக செலவிடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.