இந்தியா
சாதாரண டிக்கெட்டில் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியுமா? ரயில்வே துறை புதிய முடிவு!
முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஒருசில பெட்டிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதும் தெரிந்தது. அதையும் மீறி சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் விதிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வட இந்திய இளைஞர்கள் பலர் சென்னையில் இருந்து செல்லும் ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறியதை அடுத்து அவர்கள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது குளிர்காலத்தில் பயணிகள் பெரும்பாலும் ஏசி பெட்டிகளிலேயே அதிகம் பயணம் செய்வதாகவும், ஸ்லீப்பர் பெட்டியில் வெளியிலிருந்து வரும் குளிர் அதிகமாக இருப்பதால் ஏசி பெட்டியில் இயல்பான குளிர் மட்டுமே இருக்கும் என்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகள் பல காலியாக இருப்பதாகவும் பயணிகள் இல்லாமலே இந்த பெட்டிகள் இருப்பதால் இதை சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்க ரயில்வே துறை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தால் அந்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்தவர்களையும் அனுமதிக்க பரிசீலனை செய்து வருவதாகவும் இது குறித்து கூடுதல் விவரங்களை திரட்டுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே துறை கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டியில் பயணிகள் இல்லை என்றால் அந்த பெட்டிகளை சாதாரண வகுப்பில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முழுவதுமாக நிரம்பியிருந்தால் அதனை சாதாரண பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இது போன்ற அறிவிப்பு வெளியானது என்பதும் சாதாரண டிக்கெட்டை எடுத்தவர்கள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி இந்த நடைமுறை வழக்கமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.