கிரிக்கெட்
இந்திய அணி வீரர் இஷான் கிஷன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த அணியின் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியின் போது இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான நிஷாங்கா 75 ரன்களும், குணதிலக 38 ரன்களும், அடித்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் ஷனக அதிரடியாக 19 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 184 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே ரோகித் சர்மாவின் விக்கெட் விழுந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதன் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு ஜான்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லஹிரு வீசிய பந்து இந்திய அணி வீரர் இஷான் கிஷான் தலையில் பட்டதால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.