இந்தியா
வங்கக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயல் சின்னம்: இந்திய வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும், அந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறியது என்பதையும் பார்த்தோம்.
இந்த மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை என்றாலும் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயல் சின்னம் அடுத்த வாரம் தோன்ற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே அடுத்தவாரம் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றும் என்றும் அது புயலாக வலுப்பெற்று வடக்கே நகர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு அடுத்த வாரம் தோன்றும் புயல் சின்னம் காரணமாக ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு மழையைத் தரும் என்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த புதிய புயல் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வங்ககடலில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் புதிய புயல் சின்னம் எதுவும் வரவில்லை என்ற நிலையில் முதல் புயல் சின்னம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.