இந்தியா
மோடியை எதிர்த்து அமெரிக்க இந்தியர்கள் போராட்டம் நடத்த வேண்டும்: டெல்லி விவசாயிகள்!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து கடந்த 300 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தினர் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை எதிர்த்து அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமன்றி விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 300 நாட்களாக விவசாயிகள் சட்டத்தை எதிர்த்து தாங்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் ஆனால் மத்திய அரசு தங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட சுற்றுகள் மத்திய அரசு விவசாயிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டாததை அடுத்து போராட்டம் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உலக தலைவர்கள் தலையிட வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் கேட்டுக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.