இந்தியா
வேலைநீக்க நடவடிக்கை இருக்கட்டும்… இந்திய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட்!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே.
கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள், ட்விட்டர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வருவது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவை பொறுத்த வரை ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சம்பள விகிதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலை நீக்க நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை நாடான இந்தியாவில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன.
சிறந்த திறமையான ஊழியர்களுக்கு 15% முதல் 30 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்கும் என்றும் சராசரியாக இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு 9.8% இந்த ஆண்டு சம்பளம் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு 9.4% சம்பளம் உயர்ந்த நிலையில் உயர் தொழில்நுட்ப தொழில்கள், அறிவியல் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு இருக்கும் என்று முன்னணி நிறுவனம் ஒன்றின் அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கருதப்படும் நிலையில் இந்த சம்பள விகிதம் எதிர்பார்த்ததுதான் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானோர் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர் என்றும் அவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு படித்து முடித்த உடனே வேலை கிடைத்து விடுகிறது என்றும் வேலையின்மை விகிதம் அதிகரித்தாலும் திறமையான ஊழியர்களுக்கு நிச்சயம் உடனடியாக வேலை கிடைத்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள 818 நிறுவனங்களில் மொத்தமாக 8 லட்சம் ஊழியர்களுக்கு மேல் கடந்த ஆண்டு மட்டும் பணி கிடைத்துள்ளது என்றும் 61% நிறுவனங்கள் முக்கிய நபர்களுக்கு படித்து முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மற்றும் 9.8% சம்பள உயர்வு என்பது மிகப்பெரிய வளர்ச்சி என்ற் கூறப்படுகிறது. டயர் 1 நகரங்கள் மட்டுமின்றி டயர் 2 நகரங்களில் பணிபுரியும் பணியாளர்களும் அதிக ஊதியம் பெற்று வருகிறார்கள் என்றும் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.
எனவே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் திறமையான பணியாளர்கள் இருந்தால் அவர்களுக்குரிய திறமை நிச்சயம் மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு திறமையை வளர்த்துக் கொண்டால் நல்ல நிறுவனங்கள் தேடி வந்து வேலை கொடுக்கும் என்றும் அது மட்டுமின்றி நல்ல சம்பளத்தையும் கொடுக்கும் என்பதுதான் இதன் மூலம் தெரிய வருகிறது.