இந்தியா
உச்சக்கட்ட உஷார் நிலையில் ராணுவமும், கடற்படையும்: காஷ்மீர் விவகாரத்தால் தாக்குதல் நடக்க வாய்ப்பு!
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இந்த விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தால் பதற்றமான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புல்வாமா தாக்குதலை விட மோசமான தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கலாம் என எச்சரித்தார். ஆனால் அதற்கு பாகிஸ்தான் காரணமாக இருக்காது என கூறினார். இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் கடற்படை உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஏழு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போர் கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க உஷார் நிலையில் உள்ளது கடற்படை.