உலகம்
அந்த சம்பவத்தை எப்படி மறக்க முடியும்.. டிரம்பிற்கு எதிராக வாக்களித்த இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், தாம் தான் வெற்றி பெற்றதாகவும் தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வந்தார்.
டிரம்பின் குற்றச்சாட்டுகளை அப்படியே நம்பிய அவருடைய ஆதரவாளர்களான குடியரசு கட்சியினர், கடந்த ஜனவரி 6ம் தேதி அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தில் பைடனின் வெற்றியை முறையாக அறிவிக்கும் நிகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்து அவர்கள் நிகழ்த்திய வன்முறை அமெரிக்க வரலாற்றில் கருப்பு புள்ளியாக பதிவானது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கேபிடல் கட்டிடத்திற்குள் நுழையும் முன்பு டிரம்ப் அவர்களிடையே பேசி ஆதரவாளர்களை தூண்டி விட்டதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்ப் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிட்டனர். டிரம்ப் எதிர்கொள்ளும் இரண்டாவது இம்பீச்மெண்ட் நடவடிக்கை இதுவாகும். ஏற்கனவே பைடனுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக அவர் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் தற்போது மேற்கொள்ளப்படும் இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு இந்திய-அமேரிக்க சட்டமியற்றுபவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, கடந்த மாதம் நம்முடைய ஜனநாயக நிறுவனத்தையும், கேபிடல் கட்டிடத்தையும் தாக்கிய கூட்டத்தை அதிபர் தூண்டிவிட்டார்.
முன்னாள் அதிபரின் குற்றச்சாட்டு விசாரணை செனட் முன்பு நடைபெறும் போது என்னால் எதுவும் உதவ முடியாது, ஆனால் ஜனவரி 6ம் தேதி நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்க முடியும். வன்முறையாளர்கள் கேபிட்டலைத் தாக்கியபோது, எனது அலுவலக ஜன்னலிலிருந்து இருநூறு அடி தூரத்தில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எனது ஊழியர்களுடன் சொந்த அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என்றார்.
கிருஷ்ணமூர்த்தி இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். அதேபோல் அமி பெரா, ரோ கன்னா மற்றும் பிரமிலா ஜெயபால் ஆகிய மூன்று இந்திய-அமெரிக்க உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குற்றச்சாட்டு விசாரணையில் முன்வைக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களில், டிரம்ப் கும்பலை தூண்டிவிட்டு கேபிடல் கட்டிடத்தின் மீதான தாக்குதலை போது அதிர்ச்சிகரமான இருந்ததாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பிரமிலா ஜெயபால் கூறினார். எங்கள் மீதும் நமது ஜனநாயகத்தின் மீதும் அந்த கொடிய தாக்குதலை டிரம்ப் தூண்டிவிட்டார் என்பதை செனட்டர்கள் எவ்வாறு மறுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.