உலகம்
நாசா அமைப்பின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவ்யா லால் என்னும் பெண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிப் பரிமாற்றக் குழுவில் இதற்கு முன்னர் பணி செய்தவர் பாவ்யா லால். அதற்கும் முன்னர் 2005 ஆம் ஆண்டு முதல், 2020 ஆம் ஆண்டு வரை பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் பாவ்யா லால். அவரை நாசாவில் செயல் தலைவராக நியமிப்பதன் மூலம் அதிக அனுபவங்களை தங்கள் அமைப்புக்குள் கொண்டு வர முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர் பாவ்யா லால். அதைத் தொடர்ந்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகப் பிரிவில் முனைவர் பட்டம் முடித்தார். பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராக பாவ்யா லால் இருந்து வருகிறார். அதைப் போலவே பல்வேறு அறிவியல் துறை சார்ந்த விருதுகளையும் தன் வாழ்க்கையில் குவித்தவர் பாவ்யா. அவர், உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பங்களைக் கையாளும் நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.