கிரிக்கெட்

ரோஹித் ஷர்மா அபார சதத்தால் இந்தியா வெற்றி!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று விளையாடியது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா அணியை 227 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி. வெற்றி இலக்கை ரோஹித் ஷர்மா சதத்துடன் எட்டி அடைந்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டீகாக் ஜோடி களமிறங்கியது. இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணி 11 ரன் எடுத்தபோது ஆம்லா இந்திய வேகப்புயல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு ஆட்டக்காரர் டீகாக்கும் விரைவில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து நடையை கட்ட ஆரம்பித்தனர்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை மட்டும் தான் எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மோரிஸ் 42 ரன்களை கடைசி நேரத்தில் அடித்தார். இல்லையென்றால் தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்களுக்கு உள்ளாகவே சுருண்டியிருக்கும். இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 227 ரன்களை குவிக்க இந்திய அணிக்கு 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளிக்காவிட்டாலும் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா நிலைத்து நின்று ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன் அடித்தார். தோனியும் தனது பங்கிற்கு 34 ரன்கள் அடிக்க இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணிக்கு இந்த தொடரில் இது முதல் வெற்றி. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். வரும் 9-ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் லண்டனில் அடுத்த போட்டியில் விளையாட உள்ளது.

அடுத்த போட்டி: ஆஸ்திரேலியா Vs மேற்கிந்திய தீவுகள் அணி
இடம்: நாட்டிங்ஹாம்
நேரம்: மாலை 3 மணி

seithichurul

Trending

Exit mobile version