கிரிக்கெட்
மேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் தொடங்கியது. இதில் முதலில் ரன் குவிக்க இந்திய அணி தவறினாலும் ரஹானே, ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 297 எடுத்தது. ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும், கேஎல் ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறே இருந்தது. இதனால் அந்த அணியால் வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. இதனால் 222 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியை கதறவிட்டுள்ளார். மற்ற பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை உடன் சேர்த்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இந்தியா தரப்பில் ரஹானே சிறப்பாக விளையாடி 102 ரன்கள் எடுத்தார். விகாரி 93 ரன்களும் கேப்டன் கோலி 51 ரன்களும் எடுத்து உதவினர்.
இதனையடுத்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே படுத்துவிட்டது. 100 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி நான்காம் நாளிலேயே 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக ரன் குவித்த ரஹானேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.