கிரிக்கெட்
இந்தியா அபார வெற்றி: உலகக் கோப்பையில் தொடரும் வெற்றி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 34-வது லீக் போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 18 ரன்னில் வெளியேற கேப்டன் கோலி கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். கே.எல்.ராகுல் 48 ரன் எடுத்தபோது வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி சற்று தடுமாறியது.
ஆனால் பின்வரிசையில் விளையாடிய தோனி மற்றும் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கௌரவமான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 78 ரன்னும், தோனி 56 ரன்னும், கே.எல்.ராகுல் 48 ரன்னும், பாண்டியா 46 ரன்னும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியில் கெமார் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 269 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் மேற்கிந்திய தீவுகள் அணியால் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த வேகத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
34.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 143 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக அம்பரிஸ் 31 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா மற்றும் சஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக பும்ரா 6 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
72 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு ஒரு படி முன்னேறியுள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது.