கிரிக்கெட்
ஆசிய கோப்பை இறுதி போட்டி: இந்தியா த்ரில் வெற்றி!
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதிய இறுதிப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 நாடுகள் மோதிய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 121 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 223 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்கள் நிலையான பாட்னர்ஷிப்பை அமைக்கவில்லை இதனால் இந்த போட்டியும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை போல த்ரில்லாக சென்றது. கடைசியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் லெக் பை மூலம் 1 ரன் எடுத்தே இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியே கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.