கிரிக்கெட்
கடைசி போட்டியிலும் வாகை சூடிய இந்தியா: 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்!
![Chahar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Chahar.jpg)
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் களமிறங்கியது.
ஆனால் கடைசி போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றிபெறலாம் என்ற நோக்கத்தோடு களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் மூதல் மூன்று விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்ததால் அந்த அணி தடுமாறியது. இதனையடுத்து பொலார்ட், நிக்கோலாஸ் பூரான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டியது. இதனையடுத்து வந்த ரோவ்மன் பொவல் சிறப்பாக ஆட மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹர் 3 ஓவர்களை வீசி வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கிரன் பொல்லார்ட் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 65 ரன்களும் கோலி 59 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய சஹர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் வீத்தி தொடரை கைப்பற்றியுள்ளது.