கிரிக்கெட்

இன்று மழை பெய்தால் இந்திய அணி விளையாடாமலே இறுதிப் போட்டிக்கு முன்னேறும்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆனால் நேற்று மழையால் ஆட்டம் தடைபட்டதால் மீதியுள்ள ஆட்டம் இன்று நடைபெறும். இன்றும் மழை குறுக்கிட்டால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை விடும் மீண்டும் போட்டியை தொடரலாம் என காத்திருந்தும் மழை விடாததால் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் மீதியுள்ள ஓவர்கள் இன்று வீசப்படும். பொதுவாக போட்டியின்போது மழை குறுக்கிட்டு ஆட்டத்தில் தாமதமானால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி இன்னும் பேட்டிங் செய்யவில்லை என்பதால் ரிசர்வ் டே முறைப்படி போட்டி இன்று தொடர்ந்து நடைபெறும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒருவேளை இன்றும் மழை குறுக்கிட்டு இன்றைய போட்டி முழுவதும் ரத்தானால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருப்பதால் இந்திய அணிக்கு இந்த சலுகை வழங்கப்படும். அப்படியில்லாமல் போட்டி தொடங்க தாமதமானால் 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு இந்தியாவுக்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும்.

Trending

Exit mobile version