கிரிக்கெட்
மழையால் ரத்தானது இந்தியா, மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. முன்னர் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நேற்று தொடங்கியது.
கயானாவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் டாஸ் போடுவதே தாமதமானது. பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்ததால் மைதானத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றி ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு பின்னர் டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலும், எவின் லெவிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் 13 ஓவர்கள் வீசிய பின்னர் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்கள் முடிவில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.