இந்தியா
தரமான சம்பவம்: எல்லை தாண்டி இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல்!
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்து உரத்த குரல்கள் எழுந்தது. இந்நிலையில் அதனை தற்போது செய்து முடித்துவிட்டது இந்திய ராணுவத்தின் விமானப்படை. நள்ளிரவில் இந்தியா ராணுவத்தின் விமானப்படை காஷ்மீர் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்திய விமானப்படை காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களான ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் முகாம்களைக் குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் குண்டுவீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய எல்லையில் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.