கிரிக்கெட்
ரோஹித் ஷர்மா அதிரடி(140): பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் இந்தியா இமாலய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. கே.எல்.ராகுல் 57 ரன் குவித்தபோது அணியின் எண்ணிக்கை 136 ரன்னாக இருக்கும் போது ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சரவெடியாக வெடிக்க ஆட்டம் விருவிருப்பாக சென்றது.
ரோஹித் ஷர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி தனது பங்கிற்கு அதிரடியை தொடர 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் ரன் வேகத்தை ஓரளவுக்கு குறைத்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.
பின்னர் மழையால் ஆட்டம் தடைபட்டதால் சிறிது தாமதத்துக்கு பின்னர் பாகிஸ்தான் அணி தற்போது 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய நோக்கி களமிறங்கியுள்ளது. 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 14 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.