கிரிக்கெட்
INDvENG – இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய இந்தியா – வரலாற்று வெற்றிக்குப் பின் வரலாற்றுத் தோல்வி!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 192 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்துள்ளது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் குவிக்க, இந்தியா அதற்கு பதிலடியாக 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 420 ரன்கள் என்கிற இலக்கை இங்கிலாந்து, இந்தியாவுக்கு வைத்தது.
இலக்கைத் துரத்திப் பிடிக்கும் கனவோடு நேற்று மாலை களமிறங்கியது இந்தியா. தொடக்கத்திலேயே ரோகித் சர்மா அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இன்று காலை ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. சுப்மன் கில் மற்றும் கேப்டன் விராட் கோலி மட்டும் ஆறுதல் அரைசதங்கள் ஸ்கோர் செய்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச், இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சில வாரங்களுக்கு முன்னர் தான், இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இன்று வரலாற்றுத் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. தாய் மண்ணில் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்தப் போட்டியைப் போல அடுத்தப் போட்டியும் சென்னையில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.