கிரிக்கெட்
நியூசிலாந்தை சின்னாபின்னமாக்கிய இந்திய அணி: 157 ரன்களுக்கு ஆல் அவுட்!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இன்று முதல் ஓருநாள் போட்டி நேப்பியரில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் சமி மற்றும் சாஹல் கதறவிட்டனர். வரிசையாக நியூசிலாந்து வீரர்கள் நடையை கட்ட கேப்டன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவர் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை கேதர் ஜாதவ் தாவறவிட்டதாலே அவர் நிலைத்து நின்று ஆடமுடிந்தது. இல்லையென்றால் நியூசிலாந்து நூறு ரன்களை கூட கடந்திருக்காது.
தொடக்க ஆட்டக்காரர்களை சமி மற்றும் சாஹல் வெளியேற்ற இறுதியில் வந்தவர்களை வரிசையாக இருக்கைக்கு அனுப்பினார் சுழற்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ். 38 ஓவர்களில் அந்த அணி 157 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம்சன் 64 ரன்களையும், டெய்லர் 24 ரன்களையும் எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னிலே வெளியேறினர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 9 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.