சினிமா செய்திகள்
இளையராஜா 75; பார்த்திபனை கழட்டிவிட்டாரா விஷால்?
இசைஞானி இளையராஜாவின் 75வது ஆண்டை கொண்டாட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தலைமையில் இளையராஜா 75 என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கி, இன்றும் நாளையும் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடிகர்கள் ரஜினி, கமல், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என பெரிய பிரபலங்களின் பட்டியலே பங்கேற்கின்றன.
நிகழ்ச்சிக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் விஷால் தரப்புக்கு சாதகமாக வந்ததால், நிகழ்ச்சிக்கு எந்தவிதமான தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக நியமிக்கப்பட்ட பார்த்திபனுக்கு, விஷால் எந்தவித முக்கியத்துவமும் மரியாதையும் வழங்காததால், அவர் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நேற்று இரவு பார்த்திபன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “சுயம் பாதிக்க்கும் போது சோறு ஒரு பொருட்டாகாது” என்று சமீபத்தில் டிரெண்டான சோறு தான் முக்கியம் என்ற சிறுவனின் வசனத்தையும் தனக்கு நேர்ந்த அவமானத்தையும் சுட்டிக் காட்டி கவிதை வாயிலாக பார்த்திபன் தெரிவித்துள்ளது தெள்ளத் தெளிவாகியுள்ளது.