தமிழ்நாடு
குமரி மாவட்டத்தையே புறக்கணிப்பதாக சொன்ன பழனிசாமியை புறக்கணிச்சுடுங்க- மு.க.ஸ்டாலின் அதிரடி
![EPS - MK Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/EPS-MK-Stalin.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர், அதிமுகவுக்கு வாக்களிக்காத கன்னியாகுமரி மாவட்டத்தை புறக்கணித்ததாக கூறும் முதலமைச்சர் பழனிசாமியை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும், ‘இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர், இப்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார்.
இதை சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு கூட விஷம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் துரோகத்திற்குத்தான் விஷம் அதிகமாக இருக்கும். அவர் யார் யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்பது உங்களுக்கு தெரியும்.
அவர் சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ‘இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை” என்று பேசியிருக்கிறார்.
நினைத்துப் பாருங்கள். அவர் முதலமைச்சர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?’ எனக் கேள்வி எழுப்பினார்.