தமிழ்நாடு
‘ரூ.2000 ஆசைப்பட்டா கார் டயர்ல விழுறவங்கதான் கிடைப்பான்..!’ – பாஜக அண்ணாமலை பேச்சு
தேர்தலில் 2,000 ரூபாய் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு, ஓட்டு போட்டால் கார் டயரில் விழுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக கிடைப்பார்கள் என்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை.
மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் இந்தச் சட்டங்களுக்கு எதிராக பலகட்ட போராட்டங்கைளத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக பாஜக சார்பில், இந்த வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, ‘2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உங்களோட 5 வருஷத்த அடமானம் வச்சிடாதீங்க.
2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டா, கார் டயர்ல விழுறவன்தான் உங்களுக்கு அரசியல்வாதியாக கிடைப்பான். அதேபோல ஒரு நாளைக்கு 4 முறை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மாத்துறவன்தான் உங்களுக்கு அரசியல்வாதியா கிடைப்பான். இது வேற அரசியல். ஆனால், மோடி அரசியல் இது கிடையாது. இந்த பணம் கொடுக்கும் முறைக்கு மாற்று அரசியல்தான் மோடி அரசியல். பாஜக, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக உங்களிடம் பணம் கொடுக்காது.
பல ஆண்டு காலம் மக்களிடமிருந்து கொள்ளையடித்தப் பணத்தைதான் மீண்டும் மக்களிடமே சிறிய அளவு கொடுக்கிறார்கள். மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். புதிய பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்று பேசினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் வாதப் போர் நடந்து வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், கூட்டணியில் இருக்கும் பாஜக, ‘எங்கள் மத்திய தலைமைதான் தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்று தேர்வு செய்யும்’ என்று கருத்து தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக – பாஜக முகாம்களில் புகைச்சல் அதிகரித்துள்ளது.