வணிகம்
விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?
விப்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்தால், அடுத்த ஒரு வருடத்திற்கு, அந்நிறுவனத்தின் 9 போட்டி நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆம், விப்ரோ நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்த மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறுவது அதிகரித்து வருகிறது.
மேலும் அவர்கள் ராஜினாமா செய்வது மட்டுமல்லாமல், தங்களது போட்டி நிறுவனங்களுக்குச் செல்வதால், பல்வேறு பொருளாதார இழப்புகள் தங்களுக்கு ஏற்படுவதாக நினைத்து விப்ரோ நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன் கீழ், விப்ரோ நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் ராஜினாமா செய்தால், அசெஞ்சர், கேப்ஜெமினி, காக்னிசென்ட், டிலோயிட்டி, டி.எக்.சி டெக்னாலஜி, ஹெச்.சி.எல், ஐபிஅம், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியாது என்ற விதியை சேர்த்துள்ளது.
மேலும் அண்மைக் காலமாக தங்களது நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, போட்டி நிறுவனமான காக்னிசெண்ட்டில் தலைமை நிதி அதிகாரி ஜத்தின் தலால் மீது வழக்கு தொடர்ந்து 25.15 கோரி ரூபாய் இழப்பீட்டையும் கேட்டுள்ளது. 2002-ம் ஆண்டு விப்ரோவில் பணிக்குச் சேர்ந்த இவர், 2015-ம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். 2019-ம் ஆண்டு கூடுதலான பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டது. நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள், வணிகம் பற்றி எல்லாம் முழுமையாகத் தெரிந்த நபர் ஒருவர் வெளியேறியது தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது என விப்ரோ நிறுவனம் வழக்கைத் தொடர்ந்தது.
இவர் மட்டுமல்லாமல், விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹக்கும் காக்னிசெண்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை அடுத்து, அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்ற ஒரு ஆண்டில் மட்டும், விப்ரோ நிறுவனத்திலிருந்து ஜத்தின் தலால், முகமது ஹக், தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் சிங், இடியாஸ் பிஸ்னஸ் தலைவர் ராஜன் ஜோலி, அமெரிக்காஸ் 1 பிரிவு தலைமை நிதி அதிகாரி காமினி ஷா, அமெரிக்கா 2 தலைமை நிதி அதிகாரி நிதின் வி ஜகன் மோகன், இந்தியா தல்லைவர் சத்யா ஈஸ்வரன், துணைத் தலைவர் குருவீந்தர் ஷானி மற்றும் ஆஷிஷ் சக்சேனா, தலைமை வளர்ச்சி அதிகாரி ஸ்டீப்பன் டரவுட்மன் எனப் பலர் வெளியேறியுள்ளனர். இதுவே விப்ரோ நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணம் என பூமி டுடேற்குக் கிடைத்த தகல்கள் கூறுகின்றன.
விப்ரோவை பின்பற்றிப் பிற போட்டி நிறுவனங்களும் இந்த முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறனர். ஆனால் இந்த முடிவால் ஊழியர்கள் பாதிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.