தமிழ்நாடு
வைரமுத்து, சின்மயி விவகாரம்: ஜெயலலிதா இருந்திருந்தால்!
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடைக்கை எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காகப் பாடல் எழுதுபவர்தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்கக் கூடாது?
வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்குக் காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்குப் பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள்தானே பதில் சொல்ல வேண்டும்? சின்மயி விஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல் துறைக்குச் செல்லத் தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை.
சின்மயி விஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றார். மேலும், ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார் என்றார் திலகவதி.