தமிழ்நாடு
காதலர்களை இடையூறு செய்தால் கைது செய்ய வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் மனு!
இன்று பிப்ரவரி 14, ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த காதலர் தினமானது திருவிழாவைப்போல விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சில பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் உண்டு.
இதனால் காதலர் தினத்தன்று பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் சுற்றித்திரியும் காதலர்களை சில கும்பல் பிடித்து தாக்குவதும், விரும்பத்தகாத செயல்களை அவர்களிடம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சில இடங்களில் காதலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அசாதாரணமான சூழல் நிலவுகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்காதவாறு காதலர்களை பாதுகாக்கும் விதமாக, தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.