தமிழ்நாடு

‘ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயிச்சாலும் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வா மாறிடுவாரு’- ஸ்டாலின் சொல்லும் கணக்கு

Published

on

அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, அவர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக மாறி விடுவார் என்று பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

கிருஷ்ணகிரியில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘ஒரு அ.தி.மு.க. வேட்பாளரோ எம்.எல்.ஏ.வோ கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார். பா.ஜ.க. வருவதற்கான வாய்ப்பே இல்லை. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தொடக்கத்தில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன்.

நேற்றைக்கு புதிய தலைமுறை ஒரு கருத்துகணிப்பு வெளியிட்டிருக்கிறது. நம்முடைய அணிதான் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருகிறேன். அதனுடைய உணர்வின் அடிப்படையில் சொல்கிறேன் – 200 அல்ல, 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்த உதவாக்கரை ஆட்சிக்கு நாம் பாடம் புகட்டுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு காரணம், பா.ஜ.க.வுக்கு – மோடிக்கு கைகட்டி, வாய் பொத்தி ஒரு அடிமையாக இன்றைக்கு பழனிசாமி அவர்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? நீட் தேர்வை தடுக்க முடிந்ததா? ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க போராட முடிந்ததா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியைப் பெற முடிந்ததா? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர முடிந்ததா? இந்த லட்சணத்தில் வெட்கமே இல்லாமல் மோடியை டாடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது தான் வேடிக்கை.

இந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டே வெளிநாடு சென்று வந்தார்களே தவிர, யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்நிறுவனங்களும் கொண்டுவரப்படவில்லை.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.
இது திராவிட மண். தந்தை பெரியார் – அண்ணா – கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமல்ல இந்த தேர்தல். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்படவேண்டும். தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்டிட வேண்டும்’ எனப் பேசினார்.

Trending

Exit mobile version