சினிமா செய்திகள்
வெறும் ஒரு கதாபாத்திரத்திற்காக ஓராயிரம் பக்கங்கள் எழுதுகிறேன்: செல்வராகவன்
ஒரு கதாபாத்திரத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதுவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நீங்க முடியா இடத்தைப் பிடித்திருப்பவர் செல்வராகவன். ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல், நட்பு, ரொமன்ஸ் தாண்டி ஒரு ஊடலை உணரச் செய்வார். புதுப்பேட்டை படத்தில் ஒவ்வொரு காட்சிகளும், கதாபாத்திரங்களும் யதாரத்தமாகவே அமைந்திருக்கும்.
இவ்வாறு தனித்துவமான கதாபாத்திரங்களை எப்படி கொண்டு வருகிறீர்கள், அவ்வளவு தூரம் எழுதுவது கடினமாக இருக்காதா என்பது குறித்த கேள்விகள் நெட்டிசன்கள் செல்வராகவனிடம் எப்போதும் கேட்டு வருவார்கள்.
இந்த நிலையில், அந்த கேள்விக்கு இயக்குநர் செல்வராகவன் தற்போது பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஆம். எழுதுவது கடினமான விஷயம். அதற்கு பயிற்சியும் முயற்சியும் தேவை.
நான் ஒரு கதாபாத்திரமாக மாறி, அதை கொண்டு வருவதற்கு ஓராயிரம் பக்கங்களை எழுதுகிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது படங்களின் முக்கிய கதாபாத்திரங்களான மகேஷ், வினோத், கதிர், கொக்கி ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 திரைப்படத்தையும் தொடங்க உள்ளார். இதேபோல் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.