இந்தியா
எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!
எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார்.
எம்.பி. பதவி பறிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என குஜராத் மாநிலம், சூரத்தில் இருக்கும் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தியின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த அடுத்த நாளே (24 ஆம் தேதி) ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பேசுபொருளாகாவும் மாறியது.
பயப்பட மாட்டேன்
பதவி பறிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேற்று மதியம் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக, அதானி விவகாரத்தில் என்னுடைய பேச்சால் பிரதமர் மோடி பயந்து போனதால் தான், எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், மத்திய அரசு பீதி அடைந்து, இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத் தான் இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.
நாட்டு மக்களின் ஜனநாயக குரலைப் பாதுகாக்கவே நான் இருக்கிறேன். என்னைத் தகுதி நீக்கம் செய்வதனாலோ, மிரட்டுவதாலோ, சிறையில் அடைப்பதாலோ நான் நின்று விடுவேன் எனவும், அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு எனக் கேட்பதை நான் றிறுத்தி விடுவேன் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் நிறுத்த மாட்டேன். யாருக்கும் பயப்படவும் மாட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன் என ஆவேசமாக பேசினார். எனக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.