தமிழ்நாடு
மயில்சாமி கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினிகாந்த் உருக்கம்!
![Rajinikanth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Rajinikanth.jpg)
நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
![Mayilsamy 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Mayilsamy-1.jpg)
#image_title
அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி எனது நீண்டகால நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசுவோம். அதிகமாக எம்ஜிஆர், சிவன் பற்றிதான் பேசுவோம். விவேக் மற்றும் மயில்சாமி இருவரது இழப்பும் திரைத்துறைக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. இருவரும் நல்ல சிந்தனைவாதிகள். சமூக அக்கறை உள்ளவர்கள்.
சிவராத்திரி அன்று மயில்சாமி மரணமடைந்தது தற்செயலாக நடந்தது இல்லை. ஆண்டவனுடைய கணக்கு. அவருடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் அவர் அழைத்துக்கொண்டார். அவருடைய குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்திடம் மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கேளம்பாக்கம் சிவன் கோவிலில் நான் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என்பதை கேள்விப்பட்டேன். அவருடைய கடைசி ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் என்றார்.