தமிழ்நாடு

ரஜினியின் ஆதரவு எனக்குத்தான் – குஷ்பு சொல்லும் ‘அடடே’ லாஜிக்

Published

on

பாஜக சார்பில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பு. அப்படிப் போட்டியிடும் அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு இருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. இந்நிலையில் இன்று போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் தாக்கல் செய்தார் குஷ்பு.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஷ்பு கூறியதாவது:-

என்னைப் பொறுத்தவரை என் நண்பர்கள் எப்போதும் எனக்கு நண்பர்களாகவே இருப்பார்கள். ரஜினிகாந்தும் அப்படித்தான். நான் அவரை நேரில் சென்று ஆதரவு கேட்க முடியவில்லை என்றாலும், அவரின் ஆதரவு எனக்குத் தான் இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

இவ்வாறு சூசகமாக கூறியுள்ளார் குஷ்பு. 

Trending

Exit mobile version