தமிழ்நாடு
குஷ்புவுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கெதுவும் தெரியாது: அமைச்சரின் நக்கல் பேச்சு!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த காங்கிரஸ் மேலிடம் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக தாமதமானது தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸை கொஞ்சம் அதிகமாகவே நக்கல் செய்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸில் எப்போது வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று ஒரு காங்கிரஸ் காரரிடம் கேட்டேன். ஏப்ரல் 19-ஆம் தேதிதான் அறிவிப்பாங்க. அப்பத்தானே தேர்தல் முடிஞ்சிருக்கும். ஒரு பிரச்சனையும் வராதுன்னு சொன்னார். குஷ்புவுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கெதுவும் தெரியாது. ஏப்ரல் 19-ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்.
குஷ்புவுக்கும் திருநாவுக்கரசுக்கும் சண்டை வராது. யாருக்கும் பிரச்சனை வராது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கிறதுக்கு முன்னால நம்மாளுங்க ஜெயிச்சு டெல்லிக்கு போயிருவாங்க என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் திருநாவுக்கரசர் திருச்சியிலும், குஷ்புவின் ஆதரவாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியிலும் போட்டியிடுகின்றனர்.