தமிழ்நாடு
பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை: ஈபிஎஸ் குறித்து ஓபிஎஸ் ஆவேசம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ஈபிஎஸ் தரப்பு.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டபிறகே அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் தவிர மேலும் 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். இதில் கலந்துகொண்டு பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும், அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள். முன்வரிசையில் நாங்கள் நின்று, எதிர்வரும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம். அதிமுக சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது என்றார்.