இந்தியா
“கல்யாணத்துக்காக மதம் மாறுறதா… அதெல்லாம் ஒத்துக்க முடியாது”- ராணுவ அமைச்சர் பகீர் பேச்சு
திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இப்படியான சட்டம் நடைமுறைக்கு வந்து தீவிரமாக அமல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘எதற்காக மதமாற்றம் என்பது இருக்க வேண்டும் என்று நான் கேட்க விரும்புகிறேன். கூட்டமாக மதமாற்றம் என்பது முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை முஸ்லிம் மதத்தில், மற்றவர்களை அவர்கள் திருமணம் செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் நான் மதமாற்றத்தை ஏற்க மாட்டேன். பல சமயங்களில் இந்த மதமாற்றம் என்பது வலுக்கட்டாயமாக செய்யப்பட்டுள்ளது. எனவே அதை ஏற்கவே முடியாது’ என்று பேசியுள்ளார்.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், இந்துப் பெண்களை திருமணம் செய்து கொள்வதை ‘லவ் ஜிகாத்’ என்று இந்துத்துவ அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. இதைப் போன்ற திருமணங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியான மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.