தமிழ்நாடு
தினகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை: எம்எல்ஏ கலைச்செல்வன் அதிரடி!
அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த விருத்தாசலம் கலைச்செல்வன் தற்போது தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை எனவும், இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அவர்களுக்கு சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், தாங்கள் அதிமுகதான் என்று மூவரும் விளக்கம் அளித்தனர். மேலும் சபாநாயகர் நோட்டீஸுக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி தடையும் பெற்றனர்.
இந்நிலையில் தற்போது தேர்தலில் தினகரனின் அமமுக தோல்வியை சந்தித்ததையடுத்து பலரும் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதனையடுத்து கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன்.
அப்போது, தினகரன் அமமுக என்னும் கட்சியை ஆரம்பிக்கும்போதே அவருக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது. நான் அமமுக உறுப்பினரும் அல்ல. இதுதொடர்பாக என்னுடைய விளக்கத்தை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் இருப்பேன். நீதிமன்றத்தில் தடை வாங்குவதற்கு முன்பும் இதைத்தான் கூறினோம். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் என்றார்.