தமிழ்நாடு
துணை முதல்வர் பதவிக்கு தங்கமணி முயற்சியா? விளக்கம்!
தற்போது துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். ஆனால் இந்த பதவிக்கு அமைச்சர் தங்கமணி முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியானதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர்.
இரண்டு அணியாக பிரிந்திருந்த அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இருந்தாலும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தான் முதல்வருக்கு நெருக்கமாகவும், கட்சியில் ஆதிக்கம் செலுத்தியும் வந்தனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள தங்கமணிக்கு துணை முதல்வர் ஆசை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகச் செயல்பட்டு கட்சியில் கோஷ்டி மோதலுக்கு வழிவகுத்து வருகிறார் எனவும் பத்திரிகையில் செய்திகள் வெளியானது.
இதனையடுத்து வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள அமைச்சர் தங்கமணி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது போல ஒரு செய்தியை இரண்டு நாட்களாக வெளியிட்டுவருகிறார்கள். அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். ஜெயலலிதா கொடுத்த பதவியில் மட்டுமே இருந்துகொண்டிருக்கிறேன். எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவனில்லை இந்த தங்கமணி. கட்சியைக் காப்பாற்றுவது மட்டுமே எங்கள் பணி என தெரிவித்தார்.