தமிழ்நாடு

முகிலனை கடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகம் தான்: பரபரப்பு தகவல்!

Published

on

கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் தன்னை ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் கடத்தியதாக முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் அதன் பின்னர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றவர் அதன் பின்னர் மாயமாகிவிட்டார்.

இதனையடுத்து முகிலனுக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்? உயிரோடுதான் இருக்கிறாரா என பல சந்தேகங்களுடன் தமிழகத்தில் முகிலனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் அவரை ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து முகிலனிடம் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். இதையடுத்து எழும்பூர் குற்றவியல் பெருநகர 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக்கூடாது எனக் கூறி தன்னை துன்புறுத்தியதாகவும், அதற்கு படியாததால் நிறைய ஊசிகளை போட்டதாகவும், பத்திரிக்கையாளர்கள்,தமிழக மக்களால் தான் இதுவரை தான் உயிரோடு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை கடத்தி துன்புறுத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் காரணம், தனது மனைவி, மகன் உயிரோடு இருப்பதே தற்போதுதான் தெரியும் என்றார் முகிலன்.

seithichurul

Trending

Exit mobile version