இந்தியா
3 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தன்னைத்தானே சிறை வைத்து கொண்ட பெண்.. கணவரின் அதிர்ச்சி தகவல்..!
மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி விடும் என்று பயந்து வீட்டை பூட்டி கொண்டார். கணவர் அலுவலகம் சென்ற நேரத்தில் அவர் வீட்டை போட்டுக் கொண்ட நிலையில் கதவை திறக்க முடியாது என்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கதவை திறந்தால் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொள்ளும் என்றும் அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
தனது மனைவியை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் ஆகாததால் வேறு வழி இன்றி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து அவர் தனியாக தங்கி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் உள்பட அனைத்தையும் அவர் வாங்கி கதவின் முன் வைத்துவிட்டு வந்து விடுவார் என்றும் அவரது மனைவி கதவை திறந்து அந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை அடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சிலிண்டர் கேஸ் கூட வாங்கவில்லை என்றும் இண்டக்சன் ஸ்டவ் பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் வெளி உலக தொடர்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட அவர் தனது குழந்தைகளை ஆன்லைன் படிப்புக்கு மற்றும் செல்போனை அனுமதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி வெளியே இயல்பு நிலை திரும்பியது கூட தெரியாமல் அவர் மூன்று ஆண்டுகளாக வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தனர்.
அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டது என்றும் இனிமேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்றும் அதையும் மீறி கொரோனா வைரஸ் வரும் என்ற பயம் இருந்தால் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். அதனை அடுத்து தற்போது அந்த பெண் சமாதானம் ஆகி உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக மூன்று ஆண்டுகள் தன்னையும் தனது குழந்தைகளையும் சிறை வைத்துக் கொண்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.