தமிழ்நாடு
மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்த கணவர் கைது!
மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே வெளியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஓம் குமார் என்பவருக்கும் கடம்பத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தததால் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் ஓம் குமார் மற்றும் ஜான்சி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவிலிருந்து ஓம்குமார் திரும்பினார். மேலும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம் குமார் தனியார் மேட்ரிமோனியல் ஒன்றில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் கொடுத்தார். அதில் ஜான்சியின் தந்தையான பத்மநாபனின் செல்போன் எண்ணையும் அவர் கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து ஜான்சியை திருமணம் செய்ய நூற்றுக்கணக்கானோர் ஆர்வம் காட்டி பத்மநாதனுக்கு போன் செய்தனர். தான் இதுபோல் எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை என பதிலளித்த பத்மநாபன் ஒரு கட்டத்தில் தினமும் 100 கால்களுக்கும் மேல் வந்ததால் அதிர்ச்சி அடைந்து திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசில் பத்மநாபன் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் ஜான்சியின் கணவர்தான் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்தார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தாலி கட்டிய மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விளம்பரம் கொடுத்த கணவர் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.