உலகம்
இத்தாலியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வானவேடிக்கை; கொத்து கொத்தாக மடிந்த பறவைகள்!
இத்தாலி நாட்டின் ரோம் நகரில், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி பட்டாசுகள் வைத்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ரோம் நகர வாசிகள் இப்படி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி அதீத பட்டாசு வெடிப்பினால், ரோம் நகரில் இருந்த பல பறவைகள் செத்து மடிந்துள்ளதாக தெரிகிறது.
அதீத சத்தம், புகை மற்றும் வெளிச்சம் காரணமாக பறவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவைகளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கூறகிறார்கள். இதுவரை இத்தாலி அரசுத் தரப்போ, ரோம் நகர நிர்வாகமோ பறவைகள் கொத்துக் கொத்தாக திடீரென்று இறந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களால் தான், இப்படி பறவைகள் மடிந்திருக்கின்றன என்று விலங்குகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. புத்தாண்டுக்குக் கொண்டாட்டங்கள் இருப்பது சரியே, அதே நேரத்தில் இன்னொரு உயிரைத் துன்புறுத்தி இப்படியான கொண்டாட்டங்கள் தேவை தானா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.