தமிழ்நாடு
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த மூவருக்கும் அதிமுக கொறடாவின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகியது.
இதனையடுத்து சபாநாகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடினர் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும். அவர்கள் தொடர்ந்து வழக்கில், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயருக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சபாநாயகர் தரப்பு வாதாடிய போது, சட்ட விதிகளுக்கு உட்பட்டே எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸ் மட்டும்தான் அனுப்பியுள்ளோம். நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினர்.
எம்எல்ஏக்கள் தரப்பில் வாதாடியபோது, சபாநாயகருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைபெற்றுவரும் இந்த சூழலில் எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார் தலைமை நீதிபதி.