தமிழ்நாடு
மேயர், நகர்மன்ற தலைவர்: மறைமுக தேர்வு நடப்பது எப்படி?
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று மேயர், நகராட்சி தலைவர் உள்பட ஒரு சில பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தல் எப்படி நடக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடியவுடன் மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியான 15 நிமிடங்களுக்குள் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்தப்படும். இல்லையேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தப்படும் நிலை வந்தால் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்கு சீட்டு தயார் செய்யப்படும். இந்த வாக்குச்சீட்டுகள் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் வழங்கப்படும்.
அந்தவகையில் நகர்மன்றத் தலைவர் மற்றும் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கவுன்சிலர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்யலாம், அந்த வாக்கை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் ஆணையர் மற்றும் செயல் அலுவலரிடம் கையெழுத்து பெற்று வாக்குப்பெட்டிகள் போட வேண்டும்.
அனைத்து உறுப்பினர்களும் வாக்குப் போட்ட பின் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பை அடுத்து தேர்வு செய்யப்பட்ட மேயர் அல்லது நகர்மன்ற தலைவர் இருக்கையில் அமர வைக்கப்படுவார். இந்த முறையில்தான் மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.