செய்திகள்
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்தது ஏன்? – கைதான மணிகண்டன் அளித்த வாக்குமூலம்
சமீபத்தில் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிப்பதற்காக முயற்சி செய்த போது ரயில்வே கேட் பகுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவனும் அடக்கம். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பூமிநாதனை வெட்டி கொலை செய்தது 17 வயதுடைய மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவர் வாக்குமூலமும் அளித்துள்ளார். மணிகண்டன் அப்பகுதியில் ஆடுகளை திருடி ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டு சந்தையிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். ஆனால், இவர் இதுவரை போலீசாரிடம் பிடிபடவில்லை.
சம்பவத்தன்று பைக்கில் தன்னுடன் 10 மற்றும் 14 வயது என இரண்டு சிறுவர்களை அழைத்து சென்று ஆடு திருடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது எஸ்.ஐ பூமிநாதனிடம் சிக்கியுள்ளார். அவர்களை மடக்கி பிடித்து ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு பூமிநாதனின் செல்போனில் இருந்து மணிகண்டனின் அம்மாவிடம் இதுபற்றி கூறி அறிவுரை செய்துள்ளார். மேலும், மற்ற சிறுவர்களின் பெற்றோரிடமும் அவர் பேசியுள்ளார்.
அப்போது எங்கே கைது செய்து தன்னை சிறையில் அடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் மணிகண்டன் அங்கிருந்த கல்லை எடுத்து பூமிநாதனின் பின்னால் இருந்து அவரின் தலையில் தாக்கியுள்ளார். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த பின் தனது பைக்கில் வைத்திருந்த ஆட்டை வெட்டும் அரிவாளால் அவரின் தலை மற்றும் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். அதன்பின் அவர்கள் மூவரும் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.