உலகம்
சூறையாடப்படும் மளிகைக்கடைகள், வீட்டு வாடகை ரூ.1.30 லட்சம்.. பூகம்பத்திற்கு பின் துருக்கியின் நிலைமை..!
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக அங்குள்ள மளிகை கடைகள் சூறையாடப்பட்டு பொதுமக்கள் மளிகை பொருட்களை எடுத்துச் சென்று வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளன.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி உள்ளதாகவும், இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கையை கூட இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மீட்புடை தெரிவித்துள்ளனர்.
ஒரு சில கிராம பகுதிகளுக்கு தங்களால் செல்லவே முடியவில்லை என்றும் அங்குள்ள மக்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி உள்ளதை அடுத்து மக்கள் வசிப்பதற்கு கூட இடமில்லாமல் உள்ளனர். மீட்பு படையினர் அமைத்த தற்காலிக முகாம்களில் தற்போது பொதுமக்கள் தங்கி உள்ளனர் என்றும் அடிப்படை வசதி கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.
புதிதாக வீடு வாடகைக்கு தேடி அலையும் போது வீட்டின் மாத வாடகை ரூபாய் 1.30 லட்சம் கேட்கிறார்கள் என்றும் அந்த வாடகையை தற்போது கொடுக்க முடியவில்லை என்பதால் நிவாரண முகாமிலேயே தங்கி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதை அடுத்து வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் ஒரு சில வீடுகள் காலியாக இருந்தாலும் லட்சக்கணக்கில் வாடகை கேட்பதால் பொதுமக்கள் தற்போது தெருவில் தான் வசித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு சிலர் கார் உள்ளிட்ட ஒரு சில வாகனங்களையே தங்கும் விடுதியாக மாற்றி உள்ளனர் என்றும் ஏராளமானோர் அடிப்படை வசதிகள் இல்லாத நிவாரண முகாமில் தான் தங்கி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் உணவு சமைப்பதற்கு எந்த விதமான பொருளும் இல்லை என்பதால் மளிகை கடைகள் சூறையாடப்பட்டு வருவதாகவும் அதில் உள்ள பொருட்களை வைத்து மக்கள் தற்காலிகமாக சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதே ரீதியில் சென்றால் சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றும் ஒருவருக்கொருவர் அடித்து பிடுங்கி சாப்பிடும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பூகம்பத்தை விட மிகப்பெரிய ஒரு அபாயத்தை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது..