தமிழ்நாடு
சொத்துவரி உயர்வால் வீட்டு வாடகை திடீர் உயர்வு: சென்னை மக்கள் அதிர்ச்சி!
தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை திடீரென உயர்த்தியதை அடுத்து சென்னையில் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொன்னதால்தான் உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தங்களை நேரடியாக எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் வீட்டு உரிமையாளர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் பொதுமக்கள் பெரிய அளவில் அதற்கு எதிர்ப்பு காட்டவில்லை.
ஆனால் தற்போது சொத்து வரி உயர்வை காரணம் காட்டி சென்னையில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள் வாடகையை ரூபாய் ஆயிரம் வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடைசியில் சொத்து வரி உயர்வு சாதாரண பொதுமக்களின் தலையில்தான் இடிவிழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து மற்ற நகரங்களிலும் சொத்து வரியை காரணம் காட்டி வீட்டின் வாடகையை உயர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வாடகைக்கு இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.