இந்தியா
சர்வதேச கவனத்தை பெற்ற விவசாயிகள் போராட்டம்: ஹாலிவுட் நடிகை ஆதரவு!
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன
சமீபத்தில் குடியரசு தினத்தின் போது விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒருசில விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் இருந்து விலகினாலும் பெரும்பாலான சங்கங்கள் தற்போதும் போராட்டம் நீடித்து வருவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச கவனத்தை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ரிஹான்னா தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். நாம் ஏன் இந்த போராட்டம் குறித்து பேசவில்லை? என்று அவர் விவசாயிகள் போராட்டம் குறித்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு உள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகை ரிஹான்னாவின் இந்த கருத்தை பலர் ஆதரித்தும் ஒரு சிலர் மட்டும் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஏற்கனவே கனடா பிரதமர் உள்பட சர்வதேச அரசியல் தலைவர்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசி உள்ள நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகை ஒருவரும் இது குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிலும் குறிப்பாக 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகை தனது டுவிட்டரில் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவு செய்திருப்பதால் உலகின் கவனத்தை விவசாயிகள் போராட்டம் பெற்றுள்ளதாகவும் உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன