தமிழ்நாடு
தமிழகத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ அதிகாரிகளின் நிலை என்ன?
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகவும் இதனையடுத்து அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என்றும், உடனே ஹெலிகாப்டர் தீப்பிடித்தது என்றும் கூறப்படுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர், காவல்துறையினர், ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ராணுவ ஹெலிகாப்டரில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டு விட்டதாகவும் ஒருவரை தேடும் பணியில் ராணுவ அதிகாரிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மீட்கப்பட்ட 3 பேரும் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடம் அடர்ந்த காடு என்பதால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தற்போது ராணுவ அதிகாரிகள் மட்டுமே மீட்பு பணியை பார்வையிட்டு வருவதாகவும் இன்னும் சில நிமிடங்களில் இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவலை ராணுவ அதிகாரிகள் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
குன்னூரில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.